திருப்பதி வெங்கடாசலபதி கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி), பல்வேறு வங்கிகளில் வைப்பு செய்துள்ள தொகையின் மொத்த மதிப்பு ரூ.12,000 கோடியைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து, தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சிலவற்றில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வைப்பு செய்யப்பட்டுள்ள தொகையின் மதிப்பு ரூ.12,000 கோடியைத் தாண்டியுள்ளது. அவற்றிலிருந்து ஆண்டுதோறும் சுமார் ரூ.845 கோடி வட்டியாகக் கிடைத்து வருகிறது.
கோயிலின் ஆண்டு வருமானம், ரூ.3,100 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை கோயிலுக்கு 2.5 கோடி பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக வழங்கிய வகையில், 8.7 டன் சொக்கத் தங்கம், கற்கள் பதிக்கப்பட்ட 550 கிலோ தங்க ஆபரணங்கள் தேவஸ்தானம் வசம் உள்ளன. அதில் ஆபரணங்கள், வரும் காலத்தில் உருக்கப்பட்டு சொக்கத் தங்கமாக மாற்றப்படும்.
காணிக்கையாகக் கிடைத்த 8.7 டன் தங்கத்தில், 5,387 கிலோ பாரத ஸ்டேட் வங்கியிலும், 1,938 கிலோ இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் வைப்பு செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைப்பு செய்யப்பட்டிருந்த 1,381 கிலோ தங்கம் வைப்புக் காலம் முடிந்து சமீபத்தில் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்று அந்த அதிகாரி கூறினார்.