பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி பேச மறுப்பது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், பாகிஸ்தானுக்கு தான் என்ன செய்தேன் என்பதை மட்டுமே பேசி சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பிரதமர் மோடி, பிரசாரம் முடிவதற்குள் நாட்டில் நிலவும் பிரச்னைகள் குறித்து பேசுவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது, பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிகளால் (ஜி.எஸ்.டி) ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்பின்மை, விவசாயிகளின் துயரம், அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். ஆனால் அது குறித்தெல்லாம் ஒருமுறை கூட மோடி பேசாமல் அமைதியாக இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய சிதம்பரம், பாஜக தலைவர்கள் அறுவறுக்கத்தக்க வகையில் பேசாமல், மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.