வாக்கு ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சீராய்வு மனு தாக்கல்

மக்களவைத் தேர்தலில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 5 வாக்குச் சாவடிகளில், வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று கடந்த 8-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்யக் கோரி எதிர்
வாக்கு ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சீராய்வு மனு தாக்கல்

மக்களவைத் தேர்தலில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 5 வாக்குச் சாவடிகளில், வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று கடந்த 8-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்யக் கோரி எதிர்க்கட்சித் தலைவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. 
ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடிக்குப் பதிலாக, 5 வாக்குச்சாவடிகளில் வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நியாயமானதாக இல்லை. ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீத வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்று கோரப்பட்ட நிலையில், வெறும் 2 சதவீத அளவு வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கூறுவது போதுமானதாக இல்லை. 
இது, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன் இருந்த நிலையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இல்லை. 
மனுதாரர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள விவகாரத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட போதிலும், அதற்கான முழு பலனும், தேவையான தீர்வும் மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளில் இருக்கும் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்ப்பது என்பது, தேர்தல் நடைமுறைகளில் மக்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்த போதுமானதாக இருக்காது. 
ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலின்போது, பல வாக்குச்சாவடிகளில் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிவரச் செயல்படவில்லை. 
அங்கு 618 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு தாமதமானதுடன், 20 வாக்குச்சாவடிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 
முன்னதாக, தேர்தல் நடைமுறைகளில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 50 சதவீத வாக்கு ஒப்புகைச் சீட்டுகள், பதிவான வாக்குகளுடன் சரிபார்க்கப்பட வேண்டும் என்று கோரி தெலுங்கு தேசம் தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
கடந்த 8-ஆம் தேதி அதை விசாரித்த, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com