பயங்கரவாதத்துக்கு "புதிய இந்தியா' பதிலடி கொடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில், வியாழக்கிழமை அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பயங்கரவாதத்துக்கு "புதிய இந்தியா' பதிலடி கொடுக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் எனது தலைமையிலான அரசு பயங்கரவாதத்துக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் ஆதரவளிக்கின்றன. அண்மையில், இலங்கையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துவிட்டனர்.
கடந்த 5 ஆண்டுகளில் பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். இதற்கான பலன்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தெரியும்.
புல்வாமாவில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே பகுதியில் நமது ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 42 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். காசி விஸ்வநாதரின் அருளால் மீண்டும் வாராணசியில் எம்.பி.யாகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்றார் மோடி.
மோடியுடன் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.