
உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் முன்பு வாராணசியில் உள்ள கால பைரவர் கோயிலில் மோடி இறைவழிபாடு செய்தார்.
பிறகு உத்தரப்பிரதேச பாஜக மூத்தத் தலைவர்களுடன் சென்று தனது வேட்பு மனுவை மோடி தாக்கல் செய்தார். வேட்பு மனுத் தாக்கல் செய்த மோடியுடன் அமித் ஷா மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உடன் சென்றனர்.
வேட்பு மனுவைத் தாக்கல் செய்த மோடிக்கு, கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
முன்னதாக, வாரணாசியில் அமித்ஷாவுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாராணசியில் போட்டியிட்ட நரேந்திர மோடி, 3.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அவர், தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
அதற்கு முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.