நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்கினால் சட்டப்பிரிவு 370 நீக்கப்படும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ஜார்கண்ட் மாநிலம் பாலாமவ் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு பேசிய அவர்,
"நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்கினால் நாங்கள் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவோம்.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் தொடர்ச்சியாக இந்தியாவை குறிவைத்து வந்தனர். ராணுவ வீரர்களின் தலை பயங்கவரவாதிகளால் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பில் சமரசம் செய்யமுடியாது. காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க பாகிஸ்தான் விரும்புகிறது. அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். பாகிஸ்தானில் இருந்து ஒரு துப்பாக்கி குண்டு இந்தியாவில் நுழைந்தால், அங்கு ஒரு குண்டு வீசப்படும்.
பாஜக மோடியை பிரதமராக நாட்டுக்கு தந்துள்ளது. அப்போது முதல் நாட்டின் பாதுகாப்பு வலுப்பெற்று வருகிறது.
ஒருநாட்டுக்கு இரண்டு பிரதமர் வேண்டுமா? பிப்ரவரி 26 பாலாகோட் தாக்குதலுக்கு பிறகு நாடு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியில் இருந்தது. அப்போது, பாகிஸ்தான் மற்றும் காங்கிரஸில் சோகம் சூழ்ந்தது" என்றார்.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா காஷ்மீருக்கு தனிப் பிரதமர் என்று பேசியிருந்தார். பாலாகோட் தாக்குதல் குறித்து காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடா, குண்டுகளை வீசி ஒருசிலர் தவறு இழைத்துவிட்டனர்,பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்க வேண்டும் என்றார். எதிர்க்கட்சிகளின் இந்த கருத்துகளுக்கு பதிலடி தரும் வகையில் அமித் ஷா பேசியுள்ளார்.