எதிர்காலம் குறித்த திட்டங்களும், இலக்குகளும் இல்லாதவர்கள் தான் இப்படிப்பட்ட காரியங்களை தொடர்ந்து செய்துகொண்டிருப்பார்கள் என்று பாஜக வேட்பாளர் கௌதம் கம்பீர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக கௌதம் கம்பீர் களமிறங்குகிறார். இதனிடையே அவரது வேட்புமனுவில் பல தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன மற்றும் இரு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளதாக அத்தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கு மீதான விசாரணை தில்லி உயர் நீதிமன்றத்தில் மே 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆம்ஆத்மி புகார் குறித்து ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கௌதம் கம்பீர் கூறுகையில்,
ஆம்ஆத்மி கட்சிக்கு எதிர்கால திட்டங்கள் குறித்து எந்த கனவும் கிடையாது. அவர்களுக்கென்று எந்த இலக்கும் கிடையாது. கடந்த 4.5 ஆண்டு ஆட்சியில் தில்லிக்கு எந்த நன்மையும் ஆம்ஆத்மி கட்சி செய்தது கிடையாது. எனவே தான் அவர்கள் இதுபோன்ற அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும். இலக்கு இருப்பவர்கள் என்றுமே இதுபோன்ற எதிர்மறை அரசியலில் ஈடுபடமாட்டார்கள் என்று விமர்சித்தார்.