ஜாதி அரசியல் செய்தவர்கள் தங்கள் சொத்துக்களை பலமடங்கு உயர்த்தியது தான் மிச்சம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:
பிரதமர் நரேந்திர மோடி என்றுமே ஜாதி அரசியலில் ஈடுபட்டது கிடையாது. அவர் வளர்ச்சி அரசியலில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார். ஏனென்றால் அவர் தேசியவாதத்தால் ஊக்கப்படுத்தப்பட்டவர். எதிர்கட்சிகள் தான் ஜாதி அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதுபோன்று ஜாதி அரசியலால் ஏழைகளை ஏமாற்ற நினைப்பவர்கள் என்றும் வெற்றிபெற மாட்டார்கள்.
இந்த ஜாதி அரசியல் செய்தவர்கள் தங்கள் சொத்துக்களை பலமடங்கு உயர்த்தியது தான் மிச்சம். பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்தவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 0.01 சதவீதம் கூட கிடையாது என்று தெரிவித்தார்.
முன்னதாக, உயர் ஜாதியில் பிறந்த மோடி அரசியல் லாபங்களுக்காக தன்னை பிற்படுத்தவகுப்பைச் சேர்ந்தவராக காட்டிக்கொள்வதாக பகுஜன் சமாஜ் நிறுவனர் மாயாவதி குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு, யாரும் தயவு செய்து ஜாதி அரசியலில் தன்னை இழுக்க வேண்டாம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த நாட்டுக்கு எனது ஜாதி தெரியாது. ஆனால், எதிர்கட்சிகள் தான் அதுகுறித்து தன்னை விமர்சித்து வருவதாகவும், 130 கோடி இந்தியர்களும் தனது குடும்பம் என்று பிரதமர் மோடி பதிலடி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.