ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 மாநிலங்களுக்கு ரூ.1,080 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி புயல் அதி தீவிர புயலாக செவ்வாய்கிழமை வலுப்பெற்றுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ. தொலைவில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது
அடுத்த 36 மணி நேரத்தில் மிக அதி தீவிரப்புயலாக மாறி புதன்கிழமை மாலை ஒடிஸா கடற்பகுதியை ஃபானி நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 மாநிலங்களுக்கு ரூ.1,080 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்துக்கு மட்டும் ரூ.309.375 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரா (200.25 கோடி), ஒடிஸா (340.875 கோடி), மேற்கு வங்கம் (235.50 கோடி) ஆகிய மாநிலங்களுக்கும் புயல் முன்னெச்சரிக்கை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் பரிந்துரையின் பேரில் நிதி ஒதுக்கீடு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.