ஸ்ரீநகர்: பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து அமர்நாத் யாத்ரீகர்கள் காஷ்மீரை விட்டு உடனே வெளியேறும்படி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
தெற்கு காஷ்மீரில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்வதற்கான புனித யாத்திரை கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கியது. இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பனிலிங்கத்தைத் தரிசித்துள்ளனர். 46 நாள்கள் நடைபெறும் அமர்நாத் புனித யாத்திரை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில், அமர்நாத் யாத்திரை செல்பவர்களின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்குத் தகவல் வந்துள்ளது. இந்த தகவலையடுத்து, பாதுகாப்புக் காரணங்களுக்காக அமர்நாத் யாத்ரீகர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்க வேண்டாம் என்றும், உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும் என்று ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் கடும் குளிர் நிலவி வருவதால், ஓரிரு நாட்களில் ஸ்ரீநகர் வழியாகக் காஷ்மீரை விட்டு உடனே யாத்ரீகர்கள் வெளியேற்றப்பட உள்ளனர். உளவுத்துறை அளித்த தகவலைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்குக் கூடுதல் ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.