புது தில்லி: விசாரணையின் போது தன்னைத் தாக்க வந்த கள்ளச்சாராய கும்பலிடம் இருந்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சினிமா பாணியில் தப்பியது பற்றிய விடியோ வெளியாகியுள்ளது.
புதுதில்லி காலிண்டி கஞ்ச் பகுதியில் ஜே.ஜே. காலனி என்ற இடத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு ரோந்துப்பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ராமகிருஷ்ணன் அங்கு விசாரிக்கச் சென்றுள்ளார்.
முதலில் அவரிடம் இரண்டு பேர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் மேலும் பலர் ஒன்றாக கூடி அவரிடம் ஆக்ரோஷமாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வாக்குவாதம் முற்றி அந்த கும்பலாமானது அவரைத் தாக்கி, அவர் வந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்புவதற்காக தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டபடியே ராமகிருஷ்ணன் தப்பியோடியுள்ளார். அதுதொடர்பான காட்சியில் அந்த கும்பல் தொடர்ந்து அவரை விரட்டியபடியே சென்றுள்ளது.
இந்த் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு ஒருவரை கைது செய்துள்ளனர். தற்போது இது தொடர்பான விடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது