ஜம்மு-காஷ்மீரில் அரசுத் தரப்புக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதல் காரணமாக சிறார்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்த கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.
"ஆயுத மோதலால் பாதிக்கப்பட்ட சிறார்கள் குறித்த ஐ.நா. பொதுச் செயலரின் ஆண்டறிக்கை' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் காஷ்மீர் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
"ஜம்மு-காஷ்மீரில் சிறார்கள் பயங்கரவாத அமைப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த 2 சிறார்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. கதுவா மாவட்டத்தில், 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்' என்று ஐ.நா. பொதுச் செயலரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வுக்கான இந்தியச் செயலர் பலோமி திரிபாதி கூறுகையில், "ஐ.நா. பொதுச் செயலரின் அறிக்கை அதிருப்தி அளிக்கிறது. சர்வதேச அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இந்தியாவில் நடைபெறவில்லை. மோதல்களும் நடைபெறவில்லை. இதனால், சிறார்கள் யாரும் பாதிக்கப்படவில்லை' என்றார்.
இதனிடையே, குட்டெரெஸின் அறிக்கையை மனித உரிமை அமைப்புகளும் விமர்சித்துள்ளன. குழந்தைகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் பல்வேறு நாடுகளின் பெயர்கள் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று அந்த அமைப்புகள் விமர்சனம் செய்துள்ளன.