உத்தரப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியினர் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், சோன்பத்ரா மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர், அந்தப் பதவிகளில் இருந்து மாநில அரசால் நீக்கப்பட்டுள்ளனர்.
லக்னௌவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இந்தத் தகவலை முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "கிராம மக்களுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்த காரணத்தினால், சோன்பத்ரா மாவட்ட ஆட்சியர் அங்கித் குமார் அகர்வால், காவல் கண்காணிப்பாளர் சல்மான் தாஜ் பாட்டீல் ஆகியோருக்கு எதிராக துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரையும், பணியாளர் நலத் துறை, டிஜிபி தலைமையகத்தில் பணியமர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீதும், ஆதர்ஷ் கிரிஷி சஹாரி சமிதி, உம்பா அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
சோன்பத்ராவில் கடந்த மாதம் நேரிட்ட நிலத்தகராறு சம்பவத்தில் கோண்ட் பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் மீது கிராமத் தலைவரும், அவரது ஆதரவாளர்களும் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பழங்குடியினர் 10 பேர் பலியாகினர். மேலும் 28 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து கூடுதல் தலைமை செயலர் (வருவாய்த்துறை) விசாரணை நடத்தி, உத்தரப் பிரதேச அரசிடம் அண்மையில் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து, சோன்பத்ரா ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.