இஸ்லாமாபாத்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ஆவது சட்டப்பிரிவை நீக்கும் மசோதாவை இந்தியா நிறைவேற்றியுள்ள நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றம் செவ்வாயன்று கூடவுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370- வது சட்டப்பிரிவு ரத்து மற்றும் 35எ சட்டப்பிரிவை நீக்குதல் ஆகிய இரண்டு மசோதாக்களும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே இரு அவைகளிலும் திங்களன்று நிறைவேற்றப்பட்டது.
இந்திய அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான், 'ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு தன்னிச்சையான எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது. இந்த முடிவும் கூட காஷ்மீர் மக்களின் ஒப்புதலைப் பெற்று மேற்கொள்ளப்படவில்லை. எனவே இது சட்டவிரோதமான ஒன்று' என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றம் செவ்வாயன்று கூடவுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அழைப்பு விடுத்ததையடுத்து, செவ்வாய் காலை 11.00 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறும் என பாகிஸ்தான் அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.