பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தின் லக்னௌ, உன்னாவ், பந்தா, ஃபதேபூர் ஆகிய 4 மாவட்டங்களில் குல்தீப் செங்கருக்கு சொந்தமாக உள்ள 17 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் சிலருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
உன்னாவில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக செங்கருக்கு எதிராக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அந்தப் பெண் சென்ற கார் அண்மையில் விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த அந்தப் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. "இது விபத்து அல்ல; கொலை முயற்சி' என்று அந்தப் பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதையடுத்து, இந்த வழக்கை உத்தரப் பிரதேச அரசு சிபிஐ வசம் ஒப்படைத்தது.