மத்திய அரசு செயல்படுத்தி வரும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின் கீழ் 46 சதவீதம் பேர் மட்டுமே பயனடைந்து வருவதாக நீதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டத்தில் 78 சதவீதம் பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். இருப்பினும், இந்தத் திட்டத்தில் 46 சதவீதம் பேர் மட்டுமே ஊட்டச்சத்து பொருள்களைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். 27 மாவட்டங்களில் நடத்திய ஆய்வுகளின் மூலமாக இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
மேலும், அங்கன்வாடி சேவைகளைப் பெறத் தகுதியான நிலையில் 64 சதவீத சிறுவர்கள் இருந்தபோதிலும், அதில் நாள் ஒன்றுக்கு 17 சதவீதம் பேர் மட்டுமே சூடான, சமைத்த உணவைப் பெற்று பயனடைவதாக நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு அங்கன்வாடி மையங்களில் சுமார் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப உடனடியாக நடவடிக்கை வேண்டும் என மத்திய அரசுக்கு நீதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.