முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேறியதை கொண்டாடிய மனைவிக்கு அவரது கணவர் தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
உத்தரப் பிரதேச மாநிலம், ஃபதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த முஃபீதா கதுன் என்பவர் முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதை கொண்டாடியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் மூன்று முறை தலாக் எனக் கூறி வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டதாகவும் புகார் கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக அந்தப் பெண்ணின் கணவர் ஷம்சுதீனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முஸ்லிம் கணவருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.