இஸ்லாமாபாத்: 'காஷ்மீரை இன்னொரு பாலஸ்தீனமாக மாற்ற இந்தியா விரும்புகிறது' என்று பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹுசைன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் திங்களன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாகிஸ்தானிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 'காஷ்மீரை இன்னொரு பாலஸ்தீனமாக மாற்ற இந்தியா விரும்புகிறது' என்று பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் ஹுசைன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்றுஅவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
காஷ்மீரை மக்கள் தொகை மற்றும் பரவல் அடிப்படையில் பிரித்து, அன்னியர்களை அங்கு குடியேற அனுமதிப்பதன் மூலம், காஷ்மீரை இன்னொரு பாலஸ்தீனமாக மாற்ற இந்தியா விரும்புகிறது. அவ்வாறு நடந்து போர் ஏற்படும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு இடையேயான சிறு சிறு பிரச்னைகளில் சண்டையிடுவதைக் கைவிட்டுவிட்டு, இந்தியாவிற்கு எல்லா விதத்திலும் தக்க பதிலடி தர வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.