புது தில்லி: பாகிஸ்தானின் எஃப் 16 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானுக்கு, இந்திய ராணுவத்தின் உயரிய விருதான 'வீர் சக்ரா' வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. அதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் விமானங்கள் இந்திய விமானங்களை துரத்தி வந்த சமயத்தில், அந்நாட்டின் எஃப் 16 ரக போர் விமானத்தை, இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் சுட்டு வீழ்த்தினார்.
பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய போது தனது பைசன் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பாராசூட் மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள் அபிநந்தன் இறங்கினார். அப்போது அவரைக் கைது செய்த பாகிஸ்தான் ராணுவத்தினர் இரு நாட்களுக்குப் பின் இந்திய ராணுவத்திடம் வாஹா எல்லை வழியாக ஒப்படைத்தனர்
இந்நிலையில் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானுக்கு, இந்திய ராணுவத்தின் உயரிய விருதான 'வீர் சக்ரா' வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் செய்திநிறுவனத்திடம் கூறியதாவது:
ராணுவத்தில் வீரதீரச் செயல்கள் செய்தவர்களுக்கான விருதுக்கான இறுதிப்பட்டியல், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் முறைப்படி பெயர்கள் அறிவிக்கப்படும்.
இவாறு அவர் தெரிவித்தார்.