தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று ஒரு சில மாதங்கள் கூட ஆகாத நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மரணம் அடைந்திருப்பது பாஜகவினரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையுமே உலுக்கியது.
வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது டிவிட்டர் பக்கத்தை மிகச் சிறப்பாக கையாண்டு வெளிநாடுகளில் சிக்கித் தவித்த பல இந்தியர்களை தாயுள்ளத்தோடு காப்பாற்றி தாயகம் அழைத்து வந்த சுஷ்மா, இன்று மீண்டு வர முடியாத இடத்துக்கு சென்றுவிட்டார்.
அவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், தனது சொந்த காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார்.
இந்த அறிவிப்பினால் இந்திய மக்கள் கவலை அடைந்தார்கள். பாஜகவினரும். ஆனால் ஒரே ஒருவர் மகழ்ச்சி அடைந்தார். அவர் வேறு யாருமல்ல சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கவுசல் தான்.
இந்த முடிவை வரவேற்று டிவிட்டர் பக்கத்தில் அவர் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்ததற்கு மிக்க நன்றி.
1977ம் ஆண்டு முதல் உங்களது மாரத்தான் ஓட்டம் ஆரம்பித்தது. அன்று முதல் 11 முறை தேர்தல்களில் போட்டியிட்டு, 4 முறை மக்களவை உறுப்பினராகவும், 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளீர்கள். 25 வயதில் ஆரம்பித்தது உங்கள் ஓட்டம்.
46 ஆண்டுகளாக இந்த ஓட்டம் நிற்கவில்லை. நானும் உங்களுடன் சேர்ந்து ஓடிவிட்டேன். நான் இன்னும் 19 வயது இளைஞன் இல்லை. எனவே, இப்போதாவது இந்த ஒரு முடிவை எடுத்திருக்கிறீர்களே, அதற்கு மிக்க நன்றி என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், ஓய்வை அனுபவிக்காமலேயே காலம் சுஷ்மாவை கொண்டு சென்றுவிட்டது.