புது தில்லி: லடாக் மற்றும் காஷ்மீரை எப்போதும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று வியாழனன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் திங்களன்றும், மக்களவையில் செவ்வாயன்றும் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இதற்கான அரசாணையும் உடனடியாக வெளியிடபப்ட்டது.
அதையடுத்து இதுதொடர்பாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி வியாழன் மாலை 4 மணிக்கு வானொலியில் உரையாற்றுவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது . பின்னர் அதற்குப் பதிலாக இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றுவார் என்று அறிவிப்பு செய்யபட்டது.
அதன்படி இரவு 8 மணிக்கு துவங்கி, சுமார் 40 நிமிடங்கள் அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது:
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு.
370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் சர்தார் படேல், வாஜ்பாய் உள்ளிட்டோர் கனவு நனவாகியுள்ளது-
370 பிரிவு காஷ்மீரின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது.370 சட்டம் ரத்து செய்யப்பட்டதால் பட்டியல் இன, பழங்குடி இன மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும்.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் கிடைத்துள்ளது
இனி பிரதமரின் கல்வி உதவித் தொகை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும்:
ஆளுநர் ஆட்சியால் காஷ்மீரில் சிறப்பாக வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன
காங்கிரஸ் ஆட்சி சட்டங்களால் காஷ்மீரில் ஒரு சாரார் மட்டுமே இதுவரை பயனடைந்து வந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்-
ஜம்மு காஷ்மீரில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளிக்கப்படும்
காஷ்மீர் மக்களின் உரிமை நிலைநாட்டப்படும்; அந்த உரிமை என்றும் அவர்களுக்கு நிலைத்திருக்கும்.
காஷ்மீர் மற்றும் லடாக் உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப்படும். இனிமேல் இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமா படப்பிடிப்புகளை காஷ்மீரில் இனி நடத்தலாம்.
ஐஐடி, எய்ம்ஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காஷ்மீரில் தொடங்கப்படும்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பது தற்காலிகமானதே; மீண்டும் மாநில அந்தஸ்து விரைவில் வழங்கப்படும்.
லடாக் மற்றும் காஷ்மீரை எப்போதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்
நாங்கள் மாற்றுக் கருத்தை எப்போதும் மதிக்கிறோம்; ஆனால் தேச விரோத செயல்களை காஷ்மீரில் ஆதரிக்க முடியாது.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எனது பக்ரீத் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.