ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வழக்கம்போல் செயல்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு முன்பிலிருந்தே அம்மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இதன் காரணமாக, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது, பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது, சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இதன்பிறகு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேறி இரண்டு நாட்கள் ஆனதையடுத்து, அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் வழக்கம்போல் செயல்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஜம்மு காஷ்மீர் அரசு குறிப்பிடுகையில்,
"ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலரின் அறிவுறுத்தலின்படி, மண்டலம் மற்றும் மாநில அளவிலான அனைத்து அரசு ஊழியர்களும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். ஊழியர்கள் பணிபுரிவதற்குத் தேவையான அமைதியான சூழல் உட்பட அனைத்து வசதிகளையும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சம்பா மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி (நாளை) முதல் வழக்கம்போல் செயல்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.