உன்னாவ் பெண், வழக்குரைஞர் தொடர்ந்து கவலைக்கிடம்: எய்ம்ஸ்

அதி நவீன உயிர் காக்கும் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வரும் உன்னாவ் இளம்பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
உன்னாவ் பெண், வழக்குரைஞர் தொடர்ந்து கவலைக்கிடம்: எய்ம்ஸ்

அதி நவீன உயிர் காக்கும் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வரும் உன்னாவ் இளம்பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 24 மணி நேரமும் அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை உயிர் காக்கும் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வந்த இருவருக்கும் தற்போது அதி நவீன உயிர் காக்கும் கருவி பொறுத்தப்பட்டிருக்கிறது.

சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி வரும் உன்னாவ் இளம்பெண்ணுக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்ததை அடுத்து, உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னெளவிலிருந்து தில்லிக்கு அவர் விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டார்.

அங்கு உன்னாவ் இளம் பெண்ணுடன் அவரது தாயார் உடன் இருப்பதாகவும, உன்னாவ் பெண்ணின் வழக்குரைஞர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அவருடன் மாமனார் உடன் இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

உன்னாவ் பெண்ணுக்கு மருத்துவத்தில் பல துறை நிபுணர்களைக் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில், பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுத்த பதின்வயதுப் பெண் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி ஒன்று கடந்த வாரம் மோதியது. இதில், அந்தப் பெண்ணின் உறவினர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அப்பெண்ணும், அவரது வழக்குரைஞரும் உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னெளவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. இந்நிலையில், அப்பெண்ணுக்கு உயர்தர சிகிச்சைகளை அளிக்க வேண்டியிருப்பதால், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு செல்ல அப்பெண்ணின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, பதின்வயதுப் பெண்ணின் தாயார் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராமகிருஷ்ண ரெட்டி, அப்பெண்ணின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எனவே, அவரை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றி, உயர்தர சிகிச்சைகள் அளிக்க அவரது தாயார் விரும்புகிறார் என்றார்.

இதை ஆராய்ந்த நீதிபதிகள், பதின்வயதுப் பெண்ணை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தனர். லக்னெள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பதின்வயதுப் பெண்ணின் வழக்குரைஞரும் கவலைக்கிடமாக உள்ளதை ஆராய்ந்த நீதிபதிகள், அவரை தில்லி மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பாக அவரது குடும்பத்தினரும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கலாம் என்று தெரிவித்தனர். அதன்பின், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com