கொடைக்கானலில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை முதல் காற்றுடன் சாரல் மழை பெய்தது. அப்சரவேட்டரி, நாயுடுபுரம், செண்பகனூர், பிரகாசபுரம், அட்டுவம்பட்டி, வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
மாலையில் பலத்த காற்று வீசியது. இதில் ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி, லாஸ்காட் சாலை, சின்னப் பள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் பிரிவில் சாலையில் மரம் விழுந்ததால் கூக்கால், குண்டுபட்டி, கிளாவரை,போலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் மலைச்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தன. வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் வந்து மரத்தை அகற்றியதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது. மேலும் பூண்டி, மன்னவனூர், கூக்கால் ஆகிய கிராமங்களில் பல மணி நேரம் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
படகு சவாரிக்கு தடை: கொடைக்கானலில் வீசிய பலத்த காற்றாலும், சாரல் மழை பெய்ததாலும் ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமலும் சுற்றுலா இடங்களை பார்க்க முடியாமலும் ஏமாற்றம் அடைந்தனர். ஏரி வெறிச்சோடிக் காணப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக குளிர் அதிகமாக நிலவுகிறது.