முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலை சீராக உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
பாஜகவின் முந்தைய ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்த ஜேட்லி, அக்கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக திகழ்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் ஜேட்லி பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதயத்துடிப்பு சீராக இல்லாததால் அருண் ஜேட்லி நேற்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகத்துக்கான சிறப்பு மருத்துவர், இதயநோய் நிபுணர் உள்ளிட்டோர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி நேற்று மருத்துவமனைக்கு சென்று அருண் ஜேட்லியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், அஷ்வினி சவுபே ஆகியோரும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். இந்நிலையில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜேட்லியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தாக கூறினார்.