பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி (66), உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
இதயத்துடிப்பு சீராக இல்லாததால் மருத்துவமனையில் ஜேட்லி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகத்துக்கான சிறப்பு மருத்துவர், இதயநோய் நிபுணர் உள்ளிட்டோர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பாஜகவின் முந்தைய ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்த ஜேட்லி, அக்கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக திகழ்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் ஜேட்லி பாதிக்கப்பட்டுள்ளார்.
சர்க்கரை நோய் காரணமாக, கடந்த 2014-ஆம் ஆண்டு எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சையை அவர் செய்து கொண்டார். அதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற ஜேட்லி, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது, இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை சரியான பின்னர் மீண்டும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் மருத்துவப் பரிசோதனைக்காக அடிக்கடி அவர் அமெரிக்கா சென்று வந்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்கூட ஜேட்லி போட்டியிடவில்லை. மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக மீண்டும் ஆட்சியமைத்த போது, உடல்நலக் குறைவு காரணமாக எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள இயலாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அளித்திருந்தார்.