கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழை தொடர்ந்து வருவதால், 80-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன; பெரும்பாலான நதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வெள்ளம் காரணமாக, மலப்புரம், கண்ணூர், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே மலப்புரம் மாவட்டத்தில் கடந்த 8-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 20 சிறுவர்கள் உட்பட 59 பேர் சிக்கினர். மோசமான வானிலை நிலவுவதால் அங்கு மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மாயமானோரை தேடும் பணி தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி மாயமான 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.