ரயில் சேவையைத் தொடர்ந்து பேருந்து சேவையையும் நிறுத்தியது இந்தியா

பாகிஸ்தானுடனான சம்ஜௌதா ரயில் சேவையைத் தொடர்ந்து, பேருந்து சேவையையும் இந்தியா இன்று (திங்கள்கிழமை) ரத்து செய்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பாகிஸ்தானுடனான சம்ஜௌதா ரயில் சேவையைத் தொடர்ந்து, பேருந்து சேவையையும் இந்தியா இன்று (திங்கள்கிழமை) ரத்து செய்தது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்தும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை லடாக், ஜம்மு-காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான சம்ஜௌதா விரைவு ரயில் சேவை மற்றும் நட்பு பேருந்து சேவையை நிறுத்தப்படுவதாக அறிவித்தது. 
இதையடுத்து, இந்தியாவும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சம்ஜௌதா ரயில் சேவையை ரத்து செய்வதாக அறிவித்தது. 

இந்த நிலையில், நட்பு பேருந்து சேவையை ரத்து செய்வதாக இந்தியாவும் இன்று அறிவித்துள்ளது.     

தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) சார்பில், திங்கள்கிழமை காலை 6 மணிக்கு தில்லியில் இருந்து லாகூருக்கு பேருந்து இயக்கப்படவிருந்தது. ஆனால், இந்தியாவுடனான பேருந்து சேவையை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்ததால், இந்தியாவும் இந்த பேருந்து சேவையை ரத்து செய்வதாக டிடிசி அதிகாரி தெரிவித்தார்.   

இதுதொடர்பாக டிடிசி சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 

"தில்லி - லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்வதாக பாகிஸ்தான் எடுத்த முடிவின் விளைவாக, ஆகஸ்ட் 12 முதல் தில்லியில் இருந்து லாகூருக்கு டிடிசி சார்பில் பேருந்து இயக்கப்படாது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நட்பு பேருந்து சேவை:

தில்லி-லாகூர் இடையேயான நட்பு பேருந்து சேவை, கடந்த 1999-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியின் போது தொடங்கப்பட்டது. 2001-இல் நிகழ்ந்த நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் 2003, ஜூலையில் தில்லி - லாகூர் பேருந்து சேவை தொடங்கியது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் நிகழ்ந்த புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம், பாலாகோட் துல்லியத் தாக்குதல் சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து, தில்லி - லாகூர் பேருந்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தது. இருப்பினும், பேருந்து சேவை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதற்கிடையே, கடந்த மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களில் இந்தப் பேருந்து சேவையில் டிடிசிக்கு ரூ.7.81 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com