72 ஆண்டுகளுக்குப் பிறகு மோடியால் கிடைத்துள்ள சுதந்திரம்: பூரிப்படையும் ஜம்மு காஷ்மீர் பெண்கள்!

காஷ்மீர் பெண்களின் கௌரவம் காக்கப்படுவதோடு அவர்களுக்கான உரிமைகளும் கிடைக்கப்பெறும்...
72 ஆண்டுகளுக்குப் பிறகு மோடியால் கிடைத்துள்ள சுதந்திரம்: பூரிப்படையும் ஜம்மு காஷ்மீர் பெண்கள்!

இந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்கு பின்னர் தான், தாங்கள் உண்மையான சுதந்திரத்தை பெற்றுள்ளதாக, ஜம்மு காஷ்மீர் மாநில பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் அதிரடி நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அறிவித்தார். மேலும், ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்படுவதாகக் கூறினார். இதற்கு குடியரசுத்தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பான தீர்மானம் மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, கடும் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு காஷ்மீர் பண்டிட்டுகள் வரவேற்பு அளித்தனர். தாங்கள் இந்திய நாட்டுடன் இணையப்போவதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்நிலையில், மற்ற மாநிலங்களைப்போல காஷ்மீரும் இந்தியாவுடன் இணைந்துள்ளதையடுத்து, நாட்டின் 73வது சுதந்திர தினம் வருகிற 15ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. முக்கியமாக காஷ்மீரில் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநில பெண்கள் சிலர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ராதிகா கெர்னி என்பவர் பேசும்போது, ஜம்மு காஷ்மீரை முழுவதுமாக இந்தியாவுடன் இணைத்ததன் மூலமாக, நாம் இந்தியாவின் உண்மையான சுதந்திர தினத்தை பெற்றுவிட்டோம் என்று கூறியுள்ளார். மேலும், 'தாங்கள் காஷ்மீரிகள் அல்ல; இந்தியாவின் பிரஜைகள் என்று இனி கூறிக்கொள்ள முடியும்' என்றார்.

சங்கீதா குப்தா என்பவர் கூறும்போது, காஷ்மீரில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து அவர் பேசும் போது, "எனது உறவினர் பெண் ஒருவர் பதன்கோட் பகுதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டார். பதன்கோட் பகுதி ஜம்மு காஷ்மீர் எல்லையில் தான் இருக்கிறது என்பதால் அவரது திருமணம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கான உரிமைகள் கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால், இறுதியில் அவளுக்கான உரிமைகள் எதுவும் கிடைக்கவில்லை. தற்போது சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் காஷ்மீர் பெண்களின் கௌரவம் காக்கப்படுவதோடு அவர்களுக்கான உரிமைகளும் கிடைக்கப்பெறும்" என்று தெரிவித்தார்.

காஷ்மீரைப் பொறுத்தவரை அங்குள்ள பெண்கள், வேறு மாநிலத்தவரை மணம் புரிய முடியாது. அதுமட்டுமின்றி ஒத்த மதத்தினரை மட்டுமே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அதனை மீறும் பட்சத்தில் அவரது குடியுரிமை பறிக்கப்படும். அந்த பெண்ணிற்கான அனைத்து உரிமைகளும் மறுக்கப்படும்.

சப்னா சேதி என்பவர், "நாடு சுதந்திரமடைந்து 72 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி தலைமையிலான அரசு காஷ்மீர் பெண்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுத்தந்துள்ளது. நாங்கள் எங்களது சுய மரியாதையை திரும்பப் பெற்றுள்ளோம். முன்னதாக ஆண்களைச் சார்ந்திருந்த நாங்கள் இன்று எங்களது சுய விருப்பத்தின் பேரில் வாழப்போகிறோம்" என்றார்.

இதுகுறித்து பாஜக மகிளா மோர்ச்சா அமைப்பின் தலைவர் ரஜினி கூறும்போது, "இந்திய அரசியலமைப்பு ஆணுக்கும், பெண்ணுக்கும் சம உரிமையை வழங்குகிறது. மற்ற மாநிலங்களைப் போல, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கும் இது கொண்டு வரப்பட்டுள்ளது. 72 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீருக்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது. இந்நாளை நாட்டில் உள்ள பெண்கள் அனைவருமே கொண்டாட வேண்டும்" என்று கூறினார்.

சமூக ஆர்வலர் சீமா மாத்து கூறுகையில், "காஷ்மீர் மக்களுக்கு முக்கியமாக காஷ்மீர் பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைத்துள்ளது. அவர்களுக்கான வேலைவாய்ப்பு கிடைக்கும். சுயமாக முடிவெடுத்து வாழ முடியும். காஷ்மீரில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. இதுபோன்ற பாகுபாடுகள் விரைவில் களையப்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. " என்று கூறினார்.

எனவே ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு சுதந்திர தினம், வழக்கத்திற்கு மாறாக 'பெண்களின் சுதந்திர தினமாக' கொண்டாடப்படும் என்பதில் ஐயமில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com