பிரிட்டீஷ்காரர்களுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக செயல்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டினார். ஜம்மு-காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு ரத்து மற்றும் ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகியவை இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக திக்விஜய் சிங் கூறியதாவது:
ஹைதராபாத் இந்தியாவுடன் இணைக்க காரணம் பாஜகவா? அல்லது அதற்காக அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுத்துள்ளார்களா? அதுபோன்று காஷ்மீரை இந்தியாவின் ஒருபகுதியாக்க ஆர்எஸ்எஸ், பாஜக பங்களிப்பு என்ன? 1947-க்கு மும்பு பிரிட்டீஷுடன் இணைந்து செயல்பட்டது தான் ஆர்எஸ்எஸ்.
குறிப்பாக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை மகாத்மா காந்தி மேற்கொண்டபோது, அதை ஆர்எஸ்எஸ் தீவிரமாக எதிர்த்தது தான் வரலாற்று உண்மை. அதுமட்டுமல்லாமல் பிரிட்டீஷுக்கு முழு ஆதரவு அளித்து ஹிந்து இளைஞர்கள் அவர்களுடன் இணைய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
தேசியத்தை காங்கிரஸ் தான் எப்போதும் போற்றுகிறது. எனவே தேசியவாதம் குறித்து பாஜக எங்களுக்கு எந்த பாடமும் புகட்டத்தேவையில்லை. காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை பெறாமலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது தவறான செயலாகும். இதனால் மிகப்பெரிய பிரச்னைகள் ஏற்படும் நிலை உள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் ஒருபுறம் சீனாவும், மறுபுறும் பாகிஸ்தானும், இன்னொருபுறம் ஆப்கானிஸ்தானும் இருப்பதை மத்திய அரசு மறந்துவிட வேண்டாம். இதுபோன்ற நடவடிக்கைகளால் நாடு மிகவும் இக்கட்டான சூழலிலும், பிரச்னையிலும், சிக்கலிலும் சிக்கியுள்ளது என்று குற்றம்சாட்டினார்.