தன்னுயிரை பணயம் வைத்து ஆம்புலன்ஸுக்கு வழிகாட்டிய வீரச் சிறுவன் யார்?

கடந்த சனிக்கிழமைக்கு முன்பு வரை கர்நாடகாவைச் சேர்ந்த 12 வயது வெங்கடேஷைப் பற்றி அந்த ஊர் மக்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் இன்று..
தன்னுயிரை பணயம் வைத்து ஆம்புலன்ஸுக்கு வழிகாட்டிய வீரச் சிறுவன் யார்?


ராய்ச்சூர்: கடந்த சனிக்கிழமைக்கு முன்பு வரை கர்நாடகாவைச் சேர்ந்த 12 வயது வெங்கடேஷைப் பற்றி அந்த ஊர் மக்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் இன்று..

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. அந்த கிராமத்தில் குளம் எது? குளத்தைக் கடக்க உதவும் தரைப்பாலம் எது என்று தெரியாமல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

அப்போது, 6 குழந்தைகளையும், ஒரு பெண்ணின் சடலத்தையும் தாங்கிக் கொண்டு அவ்வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்ஸுக்கு பாலம் எந்த திசையில் இருக்கிறது என்பதை வழிகாட்ட உதவி தேவைப்பட்டது. அப்போது அங்கே இருந்த நீர்நிலையில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன், துளி நேரமும் தாமதிக்காமல் ஆம்புலன்ஸுக்கு வழிகாட்டினான்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம், தன்னை ஃபாலோ செய்து வரும்படி மேம்பாலத்தில் ஓடும் வெள்ளத்தைக் கிழித்துக் கொண்டு ஓடி வந்தான் சிறுவன், அவனை பின்தொடர்ந்து ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் வெங்கடேஷ் பற்றிய புகழும் பரவியது.

வெள்ளம் சூழ்ந்ததால் வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் நிவாரண முகாமில் தங்கியிருந்ததால், நமது எக்ஸ்பிரஸ் குழு, ஒரு வாரம் காத்திருந்து வெங்கடேஷை சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தது.

தனது வீர தீரச் செயல் பற்றி வெங்கடேஷிடம் கேட்டபோது, அன்று நான் செய்தது வீரச் செயல் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு உதவி செய்ய விரும்பினேன் செய்தேன், அவ்வளவுதான் என்கிறார் ரொம்ப சாதாரணமாக.

அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 6ம் வகுப்புப் படிக்கும் வெங்கடேஷ், சமூக வலைத்தளங்களால் தான் எவ்வளவு பெரிய புகழை அடைந்திருக்கோம் என்பது கூட தெரியாமல் அதே எளிய சிறுவனாகவே பேசுகிறார்.

நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கே ஆம்புலன்ஸ் வந்தது. அதன் ஓட்டுநர், இங்கே ஏதேனும் வழி இருக்கிறதா? வாகனம் செல்ல முடியுமா? என்று கேட்டார். இருக்கிறது என்று சொன்னபோது, அதற்கு வழிகாட்ட முடியுமா என்று கேட்டார். உடனே நான் வழிகாட்டினேன். இதில் என்ன உதவி இருக்கிறது, வீரச் செயல் செய்தேன் என்றெல்லாம் எனக்குப் புரியவில்லை என்கிறார் வெங்கடேஷ்.

வெங்கடேஷ் பெயரை வீர தீர விருதுக்கு பரிந்துரை செய்ய ராய்ச்சூர் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com