தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர்சி) இறுதிப் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களை, இணையதளத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறி வசிப்பவர்களை அடையாளம் காண்பதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதன் வரைவுப் பட்டியல் கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், சுமார் 40 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். இதையடுத்து, விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
என்ஆர்சி இறுதிப் பட்டியல் கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது. இதை ஆகஸ்டு 31-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், ஆதார் தகவல்களைப் பத்திரமாகப் பாதுகாப்பதைப் போலவே, தேசிய குடிமக்கள் பதிவேட்டின் தகவல்களையும் பத்திரமாகப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
வரும் 31-ஆம் தேதி வெளியிடப்படவுள்ள என்ஆர்சி இறுதிப் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களை இணையதளத்தில் மட்டுமே வெளியிட வேண்டும். இறுதிப் பட்டியலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டாலும், என்ஆர்சி நடைமுறையை மீண்டும் நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றனர்.