கர்நாடக சட்டப்பேரவையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சிகளைச் சேர்ந்த 17 அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தனர்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர், மஜத எம்எல்ஏக்கள் 3 பேர், சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 23-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு தோல்வியடைந்தது.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, மகேஷ் குமட்டஹள்ளி, சுயேச்சை எம்எல்ஏ ஆர்.சங்கர் ஆகிய மூவரையும் பேரவைத் தலைவராக இருந்த ரமேஷ் குமார் கடந்த மாதம் 25-ஆம் தேதி தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து, அவர்கள் மூவரும் கடந்த மாதம் 29-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனிடையே, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களான பிரதாப் கெளடா பாட்டீல், பி.சி. பாட்டீல், சிவராம் ஹெப்பார் உள்ளிட்ட 11 பேரையும், மஜத எம்எல்ஏக்களான ஏ.ஹெச்.விஸ்வநாத், கே.கோபாலையா, நாராயண கெளடா ஆகிய மூவரையும் பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் கடந்த மாதம் 28-ஆம் தேதி தகுதிநீக்கம் செய்தார்.
இதையடுத்து, இவர்கள் 14 பேரும் தகுதிநீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த 1-ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி கோரிக்கை விடுத்தார்.
இதைப் பரிசீலனை செய்த நீதிபதிகள், இது தொடர்பாக உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தகவல் தெரிவியுங்கள். அதன் பிறகு, இதை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து நாங்கள் பரிசீலிக்கிறோம் என்றனர்.