மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக, உத்தரப் பிரதேச மாநிலம், சம்பலைச் சேர்ந்த ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்ததாவது:
சம்பல் பகுதியைச் சேர்ந்த ஷெரீஃப் அகமது என்பவர், தனது முகநூல் பக்கத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் புகைப்படத்தைப் பதிவிட்டு, அதனுடன் அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தையும் பதிவிட்டதாக, சம்பல் காவல் நிலையத்தில் ஹிந்து யுவ வாஹினி அமைப்பின் தலைவர் அனுஜ் குமார் சர்மா புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 501-ஆவது பிரிவு (அவதூறு பரப்பும் கருத்துகளை பதிவிடுவது) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.