உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
சமாஜவாதி கட்சியில் இருந்து அண்மையில் விலகிய நீரஜ் சேகர், அக்கட்சி சார்பாக வகித்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். அதையடுத்து காலியான அந்த எம்.பி.பதவிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் நீரஜ் சேகர், பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
அதற்கான வேட்பு மனுவை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அந்த மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் நீரஜ் சேகர் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
அவர் வேட்புமனு தாக்கல் செய்கையில் சமாஜவாதி கட்சி தலைவர்கள் சிலரும், அக்கட்சியின் மேலவை உறுப்பினரும், நீரஜ் சேகரின் உறவினருமான ரவி சங்கர் சிங் ஆகியோரும் உடனிருந்தனர். இதுதொடர்பாக ரவி சங்கர் சிங் கூறுகையில், நீரஜ் சேகரின் உறவினராக இங்கு வந்தேன். கட்சி, அரசியலை விட குடும்பத்தினருக்கு நான் அதிக முக்கியத்துவம் அளிப்பேன். அதனால் நீரஜ் சேகருக்கு துணையாக வந்தேன் என்றார்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வரும் 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இறுதிநாளாகும். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு வரும் 19-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் நீரஜ் சேகரை எதிர்த்து போட்டியிட இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதனால் இந்தத் தேர்தலில் போட்டியின்றி நீரஜ் சேகர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி வரை அந்தப் பகுதியை
வகிப்பார்.