தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கையை (ஸ்வச் சர்வேக்ஷண் கிராமீண்-2019) மத்திய அரசு தொடங்கியுள்ளது.
திறந்தவெளி கழிப்பிடங்களை அகற்றும் நோக்கத்துடன் தூய்மை இந்தியா திட்டம், கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி தொடங்கப்பட்டது. மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த
தினத்துக்குள் (2019-ஆம் ஆண்டு, அக்டோபர் 2-ஆம் தேதி) அந்த இலக்கை அடைய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மத்திய அரசு ஆய்வு செய்ய உள்ளது.
இதுதொடர்பாக மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் புதன்கிழமை கூறியதாவது:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான ஆய்வு, 700 மாவட்டங்கள் மற்றும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது. 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த ஆண்டுகளில் ஆய்வு நடத்தப்பட்ட இடங்களை விட மூன்று மடங்கு அதிக இடங்களில் தற்போது ஆய்வு நடத்தப்படவுள்ளது.
ஒவ்வொரு கிராமத்திலும் 5 பொது இடங்களில் ஆய்வு நடத்தப்படவுள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதி இந்த ஆய்வு முடிவடைகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த தங்களது கருத்துகளை, இந்த ஆய்வுக்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி மூலம் மக்கள் தெரிவிக்கலாம். ஆய்வின் இறுதியில், தூய்மை அடிப்படையில் மாநில வாரியாக, மாவட்ட வாரியாக தரவரிசை வெளியிடப்படும். கடந்த 2018-ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின்படி, 6 ஆயிரம் கிராமங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.