மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு உதவி கோரி, அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் சுட்டுரையில் (டுவிட்டர்) தமிழில் பதிவிட்டுள்ளார். கேரளத்துக்கு உதவி தேவையில்லை என்று சிலர் பொய்ப் பிரசாரம் செய்வதாகவும், அது வேதனையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, சுட்டுரையில் பினராயி விஜயன் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
கேரளத்தில் இந்த வருடம் மழையால், வயநாடு மாவட்டத்தின் புத்துமலை, மேப்பாடி ஆகிய பகுதிகளும், மலப்புரம் மாவட்டத்தின் பூதானம், கவளப்பாரை ஆகிய பகுதிகளும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்புகளால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் முடிந்த அளவு உதவுவதற்கு கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை வரை, 91 பேர் உயிரிழந்துவிட்டனர். அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள 1,243 முகாம்களில் 2,24,506 பேர் தங்கியுள்ளனர்.
இதுபோன்ற சூழலில், கேரளத்துக்கு உதவி தேவையில்லை என்று சிலர் பொய்ப்பிரசாரம் செய்கிறார்கள். இது, எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது. கேரள மக்களுக்கு உங்கள் உதவிகள் மிகவும் தேவை. சிறியதா, பெரியதா என்ற வேறுபாடு இல்லை. முடிந்த அளவுக்கு உதவுங்கள் என்று பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளத்தில் கடந்த ஆண்டு நூற்றாண்டு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டதையும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக, கேரள அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், அண்டை மாநிலமான தமிழக மக்களிடம் உதவி கோரும் முயற்சியாக, முதல்வர் தமிழில் பதிவிட்டுள்ளார் என்றார்.