சர்ச்சைக்குரிய பாஜக எம்எல்ஏ சங்கீத் சோமுக்கு எதிரான 7 வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை உத்தரப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது.
இந்த வழக்குகள் கடந்த 2013 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் பதியப்பட்டவையாகும். இதில் முசாஃபர்பூரில் 4 வழக்குகள், சஹாரன்பூர், மீரட், கெளதம புத்தா நகர் மாவட்டங்களில் தலா ஒரு வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதில் 2013-ஆம் ஆண்டு முசாஃபர்பூர் கலவர வழக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கு விசாரணையை மேற்கொண்ட சிறப்பு விசாரணைக் குழு, சங்கீத் சோமுக்கு கலவரத்தில் தொடர்பில்லை என்று கூறிவிட்டது.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச சட்டத்துறை அமைச்சர் பிரிஜேஷ் பாதக் புதன்கிழமை கூறியதாவது:
கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது, சர்தானா தொகுதி எம்எல்ஏ சங்கீத் சோம் தன் மீதான வழக்குகள் தொடர்பாக அரசிடம் கடிதம் ஒன்றை வழங்கினார். இதையடுத்து அவர் தொடர்பான வழக்குகள் குறித்த அறிக்கை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களிடம் கோரப்பட்டுள்ளன. அந்த அறிக்கை கிடைத்த பிறகு உள்துறை முதன்மைச் செயலருக்கு அது அனுப்பி வைக்கப்படும். பின்னர் அந்த அறிக்கை அரசிடம் வந்து சேரும்.
சங்கீத் சோம் தொடர்புடைய வழக்குகள் குறித்த விவரங்கள் எனக்குத் தெரியாது. அதுதொடர்பாக பேசும் முன்பாக கோப்புகளை நான் ஆய்வு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தற்போதை நிலையில் அனைத்து நடவடிக்கைகளும் தொடக்க நிலையிலேயே உள்ளன என்று அமைச்சர் பிரிஜேஷ் பாதக் கூறினார்.