ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் ஆளுநர் சத்யபால் மாலிக் தேசியக்கொடியை ஏற்றினார்.
நாட்டின் 73வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும் சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தேசியக் கொடியை ஏற்றினர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர் ஐ காஷ்மீர் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து, துணை ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், 370ஆவது சட்டப்பிரிவு நீக்கம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வளர்ச்சிக்கு புதிய கதவை திறந்து விட்டுள்ளது என்றார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் சுதந்திர நிகழ்ச்சி என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை அண்மையில் மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை பிரித்து, லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்குவதற்கும் மத்திய அரசு சட்டம் இயற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.