புது தில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரை நேரில் சந்திக்க குடியரசுத் தலைவர் எய்ம்ஸ் விரைகிறார்.
முன்னாள் மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, உடல்நிலை பாதிக்கப்பட்டு புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 9ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இணை அமைச்சர் அஸ்வினி குமார் உள்ளிட்டோர் இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று அருண் ஜேட்லியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று அருண் ஜேட்லியின் உடல்நிலை குறித்து கேட்டறிய உள்ளதாக செய்திகள் வெளியாகின.
66 வயதான அருண் ஜேட்லி, கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் 9ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பல துறை மருத்துவர்கள் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.