புது தில்லி: உடன் பணிபுரிந்த பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ அதிகாரியை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து தலைமைத் தளபதி பிபின் ராவத் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர் மேஜர் கலோன். இவர் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் மேஜராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 2016-ல் கலோன் ராணுவத்தின் மேற்கு பகுதியில் பணியாற்றிய போது, உடன் பணிபுரிந்த பெண் கேப்டன் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக குறிப்பிட்ட பெண் கேப்டன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் மேஜர் குற்றம் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மேஜர் கலோனை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து தலைமைத் தளபதி பிபின் ராவத் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராணுவ அதிகாரி காலோனுக்குக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட மாட்டாது என்று ராணுவம் அறிவித்திருக்கிறது.
இத்தகைய குற்றச்சாட்டின் பேரில் ராணுவ அதிகாரி ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதுடன், அவருக்கு பென்ஷன் வழங்கப்பட மாட்டாது என்னும் அறிவிப்பு ராணுவ வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.