பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய தேசிய பாதுகாப்புப் படையை (என்எஸ்ஜி) சேர்ந்த 4 அதிகாரிகளுக்கு, சுதந்திர தினத்தையொட்டி போலீஸ் பதக்கம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
குரூப் கமாண்டர்களான ராகேஷ் குமார், வினோத் டோப்போ, 2-ஆம் நிலை கமாண்ட் அந்தஸ்து அதிகாரி ஆர்.கே. லங்கேஷ், என்எஸ்ஜி சட்ட அதிகாரி கே.என். செளதரி ஆகியோர் இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
இதில், தில்லியிலுள்ள என்எஸ்ஜி தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் குரூப் கமாண்டர் ராகேஷ் குமார், 1993-ஆம் ஆண்டு பிரிவு எல்லை பாதுகாப்புப் படை அதிகாரியாவார். ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாத மற்றும் கிளர்ச்சி தடுப்புப் பணிகளில் 14 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளார். கடந்த 2017 மார்ச் மாதம் பணிமாற்ற அடிப்படையில் என்எஸ்ஜியில் இணைந்தார்.
பயங்கரவாத தடுப்பு, விமானக் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக என்எஸ்ஜி கடந்த 1984-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உருவாக்கப்பட்டது.