தில்லி ரோஹிணி அவந்திகா பகுதியில், பணம் வசூல் செய்யும் முகவரிடம் பொம்மை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ.1.22 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது: பணம் வசூல் செய்யும் முகவர் ஒருவர், கடந்த 11-ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் ரோஹிணியில் உள்ள அவந்திகா செளக் பகுதியில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்வதற்குச் சென்றுள்ளார்.
அப்போது, அந்த ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் பொம்மை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி முகவரிடம் இருந்த ரூ.1.22 லட்சத்தைப் பறித்துக் கொண்டு தப்பினார். இது குறித்து அவர் போலீஸில் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து , போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அந்த இளைஞரின் நடமாட்டம் குறித்து போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து, முகவரிடம் பணத்தைப் பறித்துச் சென்ற இளைஞரை புதன்கிழமை கைது செய்தனர். மங்கோல்புரி காலான் பகுதியைச் சேர்ந்த அவரிடமிருந்து ரூ.90,000 ரொக்கம் மற்றும் பொம்மை துப்பாக்கி ஆகியவை மீட்கப்பட்டது என்றார் அந்த அதிகாரி.