அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை எதிர்காலத்தில் மாறுதலுக்கு உள்ளாகலாம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
இதுதொடர்பாக ஐ.நா.வில் ஆலோசிக்கப்பட்டது தொடர்பாக லடாக் எம்.பி. ஜாம்யாங் சேரிங் நமங்யால் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக லடாக் பிரச்னை தற்போது ஐ.நா. பாதுகாப்பு கௌன்சில் கூட்டம் வரை எதிரொலித்துள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். முந்தைய காங்கிரஸ் அரசுகளில் நாடாளுமன்றத்தில் கூட லடாக் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டதில்லை.
தன் நிலம் சார்ந்த பகுதிகளின் வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம். இதனால் அண்டை நாடுகளுக்கு பிரச்னை இருந்தால், அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. லடாக் என்பது இந்தியாவின் ஒரு பகுதி, இந்திய மகுடத்தின் முக்கிய மதிப்பிட முடியாத ஆபரணம். எனவே லடாக் விவகாரம் இந்தியாவுக்கு தொடர்புடையது.
போர் ஏற்படக்கூடாது என்பது தான் அனைவரின் விருப்பமும். ஆனால், தேச நலன் கருதி அதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டால், மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் லடாக் மக்கள் நிச்சயம் உறுதுணையாக இருப்பார்கள் என்று தெரிவித்தார்.