மத்திய முன்னாள் அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதையடுத்து, உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவை மறுசீரமைப்பு நிகழ்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த அமைச்சரவையில் முதல்வர் உள்பட 43 அமைச்சர்கள் பதவியில் உள்ளனர். இரண்டு துணை முதல்வர்கள், 18 கேபினட் அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்புடன் கூடிய மாநில அமைச்சர்கள் மற்றும் 13 இணை அமைச்சர்கள் ஆகியோர் இதில் அடங்குவர். மொத்தமாக 403 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில், அதிகபட்சமாக முதல்வர் உள்பட 63 அமைச்சர்களை நியமிக்க முடியும். அந்த வகையில், இன்னும் காலியாக உள்ள துறைகளுக்கு 20 அமைச்சர்களை நியமிக்கலாம்.
இந்நிலையில், அமைச்சரவையில் மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்களை நியமிப்பது குறித்து இரு தினங்களுக்கு முன்னதாகவே, பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவிடம், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை செய்தார். நேற்று அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலையும் சந்தித்து பேசியிருந்தார். இன்று (திங்கட்கிழமை) அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று மாநில அரசு தகவல் தெரிவித்திருந்தது.
ஆனால், மத்திய முன்னாள் அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதையடுத்து, அமைச்சரவை மாற்ற நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், நிலைமை சீராகும் பட்சத்தில் இந்த வார இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.