உ.பி.,யில் புதனன்று முதல்வர் யோகி தலைமையிலான அமைச்சரவை மாற்றம்
லக்னௌ: உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் புதனன்று மாற்றம் செய்யப்பட உள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது இவரது அமைச்சரவையில் 43 அமைச்சர்கள் பதவி வகிக்கின்றனர். இவர்களில் 21 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாகவும் மற்றும் 13 பேர் இணை அமைச்சர்களாகவும் பணியாற்றுகின்றனர். 17 துறைகள் காலியாக உள்ளன
இந்நிலையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் புதனன்று மாற்றம் செய்யப்பட உள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதன் மாலை நடைபெற உள்ள விழாவில் புதிதாக ஆறு அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகவும், அவர்களில் மேற்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அமைச்சரவையில் இடம்பிடிப்பார்கள் என்றும் தெரிகிறது.
இதுதொடர்பாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில பாஜக தலைவர் ஸ்வதிந்திர சிங் தேவ் ஆகிய இருவரும், வெள்ளியன்று பாஜக தேசிய செயல் தலைவர் நட்டாவை சந்தித்துப் பேசினார்கள். அதேபோல் சனிக்கிழமை மாலை மாநில ஆளுநர் ஆனநதிபென் படேலை முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ள அதே சமயம் பாஜக மேலிடத்தின் உத்தரவின்படி, இரண்டு வருட யோகி ஆட்சியில் மோசமான மற்றும் சராசரி செயல்பாடுகளின் காரணமாக ஐந்து அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அவர்களது பெயர்கள் வருமாறு: ராஜேஷ் அகர்வால் (இவர் செவ்வான்று ராஜிநாமா கடிதம் அளித்து விட்டார்.), ஸ்வதிந்திர சிங் தேவ் , சேட்டன் சவுகான், அனுபமா ஜெய்ஸ்வால்,முக்தி பிஹாரி வர்மா மற்றும் ஸ்வாதி சிங். புதிய அமைச்சர்களுக்கு வழிவிட்டு மீதமுள்ளோர் நாளை காலை ராஜிநாமா செய்வார்கள் என்று தெரிகிறது.