அயோத்தி வழக்கு: திங்கள்கிழமை விசாரணை திடீர் ஒத்திவைப்பு
அயோத்தி வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெறவில்லை. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அவசர பணியின் காரணமாக சென்றுவிட்டதால் வழக்கு விசாரணை திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு பட்டியலிடப்பட்டதாக உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: அயோத்தி வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தினசரி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
தொடர்ந்து 8-ஆவது நாளாக திங்கள்கிழமை வழக்கு விசாரணை நடைபெற இருந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அவசரப் பணி காரணமாக சென்றுவிட்டார். அதனால் வழக்கு விசாரணை அன்றைய தினம் நடைபெறவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு (ஆக. 20) பட்டியலிடப்பட்டது.
முன்னதாக விசாரணை அமர்வைச் சேர்ந்த 5 நீதிபதிகளும் நீதிமன்றத்தில் இருந்தனர். எனினும், நீதிபதி எஸ்.ஏ. போப்டே நீதிமன்றத்துக்கு வரவில்லை என்று தவறான தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போப்டே அவரது அறையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது என்று அந்த வட்டாரங்கள் கூறின.
அயோத்தி வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அன்றாடம் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி ராமர் கோயில் மூலவர் தரப்பு வாதம் திங்கள்கிழமை நடைபெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.