சத்தீஸ்கரில் உடனடி முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தில்ஷாத் அக்தர் (29). இவருக்கும், இவரது மனைவி உஜ்மா பர்வீனுக்கும் (25) இடையே கடந்த 15-ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, உஜ்மாவை தாக்கிய தில்ஷாத், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதாக கூறியுள்ளார். மேலும், வீட்டை விட்டு உஜ்மாவை விரட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, மானேந்திரகர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அதனடிப்படையில், முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2019இன் 4-ஆவது பிரிவின்கீழ் தில்ஷாத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, கணவரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சிணை கேட்டு தன்னை துன்புறுத்தி வருவதாக, உஜ்மா தனது புகாரில் கூறியுள்ளார். எனவே, தில்ஷாத்தின் குடும்பத்தினருக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.
உ.பி.யில்: இதேபோல், உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டத்தில் உடனடி முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் கைது செய்யப்பட்டார்.
இம்ரான் என்ற அந்த நபர், தனது மனைவி பெண் குழந்தை பெற்றதற்காக அவரை துன்புறுத்தி வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் முத்தலாக் கூறி, மனைவியை வீட்டிலிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில் இம்ரான் கைது செய்யப்பட்டார்.