பெங்களூரு: ராஜாஜிநகரைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காவல்துறையினர் காவலில் வைத்துள்ளனர். ஏன் தெரியுமா? தனது தந்தையை திட்டமிட்டுக் கொலை செய்த குற்றத்துக்காக.
காதலனுடன் ஊர் சுற்றுவதைத் தட்டிக் கேட்டதற்காகவும், செல்போனை பறித்து வைத்துக் கொண்டு, ஒழுங்காக படிக்கும்படி சொன்ன தந்தை மீதிருந்த அதிருப்தியில் அவரை தனது காதலனின் துணையோடு கொலை செய்ததாக இந்த சிறுமி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
13 வயது சிறுமியின் 19 வயது காதலன் பிரவீன். இந்த கொலை வழக்கில் பிரவீனையும் கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.
கடந்த ஞாயிறன்று 41 வயது தந்தையை கொன்று, உடலுக்குத் தீவைத்ததாக சிறுமியை கைது செய்திருக்கும் காவல்துறையினர், அவரது அடையாளத்தை வெளியிடவில்லை.
கொலைக்குக் காரணம், ஒரே பள்ளியில் படித்து வந்த சிறுமியும் பிரவீனும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விஷயம், தந்தைக்கு தெரிந்ததும், மகளை கண்டித்துள்ளார். பிரவீனை விட்டு விலகுமாறும் கூறியுள்ளார். ஃபோனை வாங்கி வைத்துக் கொண்ட தந்தை, ஒழுங்காக படிக்கும்படி மகளிடம் சொல்லியிருக்கிறார்.
தங்களது சுதந்திரம் பறிபோனதால் ஆத்திரம் அடைந்த காதலர்கள், தந்தையைக் கொலை செய்ய திட்டமிட்டனர். சனிக்கிழமை இரவு தந்தை அருந்தும் பாலில் தூக்க மாத்திரையைப் போட்ட சிறுமி, தந்தை உறங்கியதும் பிரவீனை வீட்டுக்கு அழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து தந்தையை குத்திக் கொன்றுள்ளனர். பிறகு உடலை எரித்துள்ளனர். வீட்டுக்குள் இருந்து புகை வருவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த போது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த சம்பவம் நடந்த போது, சிறுமியின் தாய், புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அந்த சமயத்தை பயன்படுத்தி தந்தையைக் கொலை செய்ய இருவரும் திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.
தாங்கள் செய்த குற்றத்தை இருவருமே ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.