சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் ரூ.350 கோடி மோசடி செய்ததாக, மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உறவினர் ரதுல் புரி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறுந்தகடுகள், டிவிடிக்கள், மின்னணு தகவல் சேமிப்பு உபகரணங்களைத் தயாரித்து வந்த மோசர் பேர் நிறுவனம், சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட சில வங்கிகளில் கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து கடன் வாங்கியுள்ளது. ஆனால், அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. இதுதொடர்பாக, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா அளித்த புகாரையடுத்து மோசர் பேர் நிறுவனத்தின் அலுவலகம், ரதுல் புரி உள்ளிட்டோருக்குச் சொந்தமான வீடுகள் என மொத்தம் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, ரதுல் புரி, அவரது தந்தையும், மோசர் பேர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான தீபக் புரி, மற்றொரு இயக்குநர் நீதா புரி (ரதுல் புரியின் தாயார், கமல்நாத்தின் சகோதரி) மற்றும் சஞ்சய் ஜெயின், வினீத் சர்மா ஆகிய 5 பேருக்கு எதிராகவும், மோசர் பேர் நிறுவனத்துக்கு எதிராகவும் சிபிஐ வழக்குப் பதிவும் செய்தது. இந்நிலையில், 354 கோடி ரூபாய் அளவிலான வங்கி கடன் மோசடி வழக்கில், தொழிலதிபர் ரதுல் புரி பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார். கைதான ரதுல் புரி மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் தங்கை மகனாவார். இவர், மோசர் பேர் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து கடந்த 2012-இல் விலகி விட்டார். மேலும், அந்த நிறுவனம் தற்போது செயல்பாட்டிலும் இல்லை. ஏற்கெனவே, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில் ரதுல் புரி மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.